
2016 ஆம் ஆண்டு வெளிவந்த எமது “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற வரலாற்று ஆய்வுநூல்
பண்டையகாலம் முதல் கி.மு. 50 வரையான பழந்தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமே ஆய்வு செய்து எழுதியுள்ளது. அதன் பிந்தைய சங்கம் மருவிய காலத்தையும் (கி.மு.50 - கி.பி.250), களப்பிரர் காலத்தையும் (கி.பி.250-575) விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் தான் இப்போது வெளிவருகிறது
சங்கம் மருவிய காலம் என்பது கி.மு.50-கி.பி.250 வரையான பேரரசுக் காலகட்டம். அதே காலகட்டத்தில் தான் உரோம் நகரக் குடியரசு (கி.மு.27), பேரரசாக ஆகியது என்பதோடு அதன் மிகச்சிறந்த காலகட்டம் என்பது அகசுடசு முதல் மார்க்கசு அரேலியசு காலம் (கி.பி.180) வரையான சுமார் 200 ஆண்டுகாலகட்டம் (கி.மு.27-கி.பி.180) ஆகும். அக்காலகட்டத்தில்தான் சங்கம் மருவியகாலத் தமிழ்நாடு உரோமுடன் மிக அதிக அளவான வணிகத்தை நடத்திவந்தது. அதனால் தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவான (90%) உரோம் நாணயங்கள் தமிழ் நாட்டில் கிடைக்கின்றன.
இதே காலகட்டத்தில் (கி.பி.78) தான் எரித்ரேயக் கடலில் பெரிளசு நூலின் கிரேக்கப்பயணி தமிழ்நாடு வந்து திரும்பினார். இதே காலகட்டத்தில்தான் (கி.பி.150) ‘முசிறி-அலெக்சாண்ட்ரியா’ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேகாலகட்ட இசுட்ராபோ, தாலமி, பிளினி போன்ற உரோம் ஆசிரியர்கள் தமிழ்நாடு குறித்தப் பல விடயங்களைத் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு நூல்களும் பழந்தமிழ்நாடு குறித்து நிறையத் தரவுகளை வழங்குகின்றன. .











