
தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில்.
இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, பழங்காலந்தொட்டே ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்தவற்றை தங்களின் பெயரால் பொறித்து வைத்துள்ளார்கள் என்பதைச் சொல்லும், 'வரலாற்றுக் காலம் தொட்டு இப்படித்தான்' கட்டுரை, அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒன்றும் புதிதில்லை; மன்னர் காலத்திலேயே நிலத்தைத் தானமாக யாருக்கோ வழங்க மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் 'நிலமென்பது வெறும் மண்ணல்ல' கட்டுரை.
ஆகம விதிகளின்படி கோயில்களில் வழிபாடு நடக்க வேண்டும் என்றால், முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறும், 'ஆகம நெறியையே நடைமுறைப்படுத்துங்கள்' கட்டுரை.
ஆளுக்கொரு வீட்டில் வாழ நினைக்கும் மனப்பான்மையை விமர்சிக்கும் 'கனவு இல்லம்' கட்டுரை. நூலாசிரியர் பிறந்த வந்தவாசியைப் பற்றிய கட்டுரை, விளையாடிய தெரு, முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த பள்ளியைப் பற்றிய கட்டுரை என்று பலவிதமான விஷயங்களை உரத்த குரலில் இந்நூல் பேசுகிறது.











