
ஒரு குழந்தையின் முதல் உலகம் அதன் வீடு மற்றும் சூழல். அந்த உலகின் முதல் கதையாளர் பாட்டி. குழந்தையின் கற்பனை, மொழி, உணர்வு, நினைவு, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பார்வை – இவை அனைத்தும் யாரும் எழுதித் தராத பாடங்களாக அம்மாச்சியின் கதைகளில் விதைக்கப்படுகின்றன. இந்த நூல், அம்மாச்சியை ஒரு குடும்ப உறவாக மட்டுமல்லாமல், ஒரு பண்பாட்டு நினைவகமாகவும், கற்பனையின் முதல் ஆசிரியராகவும் வாசகருக்கு அறிமுகப்படுத்துகிறது. கதைகள், அனுபவங்கள், நாடகப் பார்வை, கலையின் மூலம் கல்விச் சிந்தனை ஆகியவற்றின் வழியே, மறக்கப்பட்ட ஒரு கற்றல் மரபை மீட்டெடுக்கும் முயற்சியாக இது உருவாகியுள்ளது. கல்வி சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு சிறார்களின் மீது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. கலை வடிவில் மூடநம்பிக்கையை உடைக்க முடியும் என்பதை நாடகச் செயல்பாடுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. குழந்தைப் பருவத்தை நினைவுகூர விரும்புபவர்களுக்கும், குழந்தைகளின் உலகைப் புதிதாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நூல் ஒரு புதிய வாசிப்பனுபவமாக அமையும்.











