


யுகபாரதி மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்துப் பேசும் இலக்கியம், மனத்திற்கு நெருக்கமானதெனில் இக்கவிதைகளையும் அவ்வாறே உணரமுடியும், சமூகத்தின் இழி குணங்களைப் பழிக்கும் இவர் கவிதைகள், வாழ்க்கையில் பற்சக்கரங்களில் சிதைவுற்றுப் போகும் மனிதர்களின் அவலங்களைப் பேசுகின்றன.
எளிமையெனினும் காத்திரம் நிரம்பிய இக்கவிதைகள். காலத்தை அப்பட்டமான பிரதியாக்கித் தருகின்றன. நாட்டார் இலக்கியத்தின் சாயலை நவீனக் கவிதைகளில் கொண்டுவரும் மிகச் சிலரில் யுகபாரதி குறிப்பிடத்தக்கவர்.
திரைத்துறையில் முன்னணிப் பாடலாசிரியராக விளங்கிவரும் யுகபாரதி, தொடர்ந்து இலக்கியத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புகள் பாராட்டுக்குரியன..கவிதை, கட்டுரை. திரைப்பாடல், சொற்பொழிவு என வெவ்வேறு தளங்களில் இயங்கினாலும் தன் அசலான முகமும் அகமும் கவிதைகளே என்பதை இந்நூலில் காண்பித்திருக்கிறார். இந்நூல், மனப்பத்தாயம். பஞ்சாரம். தெப்பக்கட்டை அந்நியர்கள் உள்ளே வரலாம். நொண்டிக்காவடி, தெருவாசகம். ஆகியவற்றின் தொகை நூல்.











