


காலவெளியின் ஓர் மண்டலத்தே நின்று நோக்குமிடத்து உலகமக்கள் ஒன்று, நாகரிகம் ஒன்று, மொழி ஒன்று, வழிபாடு ஒன்று எனத் தெள்ளிதிற்றோன்றும். இவ்வுண்மைகளையே பல முகத்தான் இந்நூல் அகலக் கூறுகின்றது. இந்நூல், எமது 'தமிழர்' சரித்திரத்திற்கு முன்னுரை போன்றது.
தமிழ் என்னுஞ் சொல்லின் உற்பத்தியைக் குறித்துப் பலர் பலவாறு கூறியுளர். தமிழ் என்னும் சொல், இடப்பெயர் மக்களுக்காதல் மக்கட்பெயர் மொழிக்காதல் என்னும் ஓர் இயற்கை விதியைப் பின்பற்றித் தோன்றியிருத்தல் வேண்டுமேயன்றி வேறு எம்முறையிலும் தோன்றியிருக்க முடியாதென்பது எமது துணிபு.











