


வாழ்க்கை என்பது ஏறு வரிசையா? இறங்கு வரிசையா? 'காலத்திற்கேற்பத் தொழில் செய்கிறவருக்கு ஏறு வரிசை. காலத்திற்கும் ஒரே தொழில் செய்கிறவருக்கு இறங்கு வரிசை' என்கிற வாழ்க்கைச் சூத்திரத்தின் புனைவுமொழிபெயர்ப்பே உப்பிலிக்குடி எனும் இந்நாவல்.
உப்பு, கடலில் பூத்துக் கரையில் காம்பு உதிரும். இதுவே புதுக்கோட்டையில், அக்னியாற்றுப் படுகையில் பூத்து அதில் புழங்கி வாழ்ந்த மக்களின் வியர்வையில் காம்பறுந்தது. மண்உப்புக் காய்ச்சியதோடு தங்களையும் காய்ச்சிக்கொண்டவர்கள் உப்பிலியர்கள். மண் உப்பு விலைபோன வரைக்கும் அவர்களும் விலை போனார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மண் உப்புக்குத் தடை விதித்ததும் அவர்கள் தவிட்டு மண்ணைப்போல ஒதுக்கப்பட்டார்கள்.
அக்னியாறு இன்றும் உப்புப் பூத்தே ஓடுகிறது. மேலோட்டக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்கு அந்த உப்பு, ஆறு தன் ஓட்டத்தில் உதிர்த்த வியர்வை முத்துகளாகத் தெரியும். ஆனால், உப்பிலிக்குடி மக்கள் பிழைப்பு அறுந்து, ஊர் அறுந்து, இடம்பெயர்ந்து செல்கையில் உதிர்த்துவிட்டுச் சென்ற கண்ணீர்ப் பொடுகுகள் அவை. அவர்களின் வியர்வை, கண்ணீர் இரண்டிலுமுள்ள உப்பின் காரத்தை இந்நாவல் பேசுகிறது.











