
இத்தொகுப்பில் இருபது கட்டுரைகள் உள்ளன. இவற்றை விமர்சனக் கட்டுரைகள் என வகைப்படுத்தலாம். சிலவற்றில் மதிப்புரையின் இயல்புகளும் சிலவற்றில் ஆய்வுத்தன்மையும் இணைந்திருக்கக்கூடும். தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் மதிப்புரைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் பெரும் ஆர்வத்துடன் இருந்தேன். அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். படைப்பில் செலுத்த வேண்டிய பொழுது வீணாயிற்றோ என்று அக்காலம் பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. அப்படியல்ல என்பதை எனக்கு நினைவுபடுத்திக் கொஞ்சம் மகிழ்ச்சியையும் தருவது இந்நூல்தான். பொருட்படுத்தத்தக்க விமர்சனக் கட்டுரைகள்தான் இவை என்பதை இப்போது மறுபதிப்புக்காக வாசிக்கும்போதும் உணர்கிறேன்.
- பெருமாள்முருகன்











