
படைத்தவனைத் தெரிந்துகொள்ள படைப்புக்களைப் பற்றி சிந்தனை செய்வதும் வழிபாடு என்று சொல்கிறது ஒரு நபிமொழி.
உலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் இறைவன். அவனது படைப்பாற்றல் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளது. அவனது ஒவ்வொரு படைப்பிலும் அதற்கான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. படைப்பின் ஒழுங்கமைப்பு, செயல்பாட்டில் துல்லியம், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகள், வாழிடப் பாதுகாப்பு போன்றவை கனகச்சிதமாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
நடுநிலை நின்று அறிவார்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் சான்றுகளும் அத்தாட்சிகளும் நன்கு புலப்படும். அற்பமாகக் கருதப்படும் கொசு, ஈ போன்ற படைப்புகளிலிருந்து பிரமாண்டமான சூரியன் வரை அவற்றின் சிறப்புகள், பயன்கள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.











