


இவரது மொழிநடையில் பயணத்தின் அலைகழிப்பை முழுமையாகக் காணவும் உணரவும் முடிகிறது. ரயில் பெட்டிகள் இடைவெளியின்றி ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டு நிற்கின்றன. துளிதுளியாக விலகி நில்லாமல் பெரிய மலைபோல் மேகம் வளர்ந்து நிற்கிறது. அகக்காட்சி, புறக்காட்சி, அகச்சத்தம், புறச்சத்தம் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. கலை, இலக்கியம், வாழ்க்கை, இசை, சமூகம் என்று பல தளங்களில் தாவித் தாவிச் செல்கின்றன இதிலுள்ள கட்டுரைகள். கனவு, ஏக்கம், சினம், அமைதி, அன்பு அனைத்தும் அலை அலையாகக் கிளம்பிவந்து நம்மைத் தழுவிக்கொள்கின்றன.
விவரிப்புகளைவிட, விளக்கங்களைவிட விசாரணைகள் அதிகம். விடைகளைவிடக் கேள்விகள் மிகுதி. கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் ஒரு முழு உலகம் உயிர்த்திருக்கிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்நூலை வாசித்துப் பார்க்கலாம்.
-மருதன்











