


ஜீவகுமாரனின் எழுத்து, முற்றிய பனை மரத்தின் சேவுக்கு ஒப்பானது. துளிரும் துயரும் அதில் ஒன்றாகத் துளிர்க்கின்றன. அவரது மொழி எளிமையானது. ஆனால் அதன் ஒலியில் வலியும் அம்மண்ணின் பெருமையுடன் கலந்து நிற்கின்றன. இந்த நாவல், அகதியின் கண்ணீரை அரசியலாக அல்ல; மனிதத்தின் நிழலாகப் படைக்கிறது. அது யாழ்ப்பாணத்தின் வரலாற்றையும் தமிழினத்தின் மன அழுத்தத்தையும் பெண்மையின் உள் சக்தியையும் ஒரே நேரத்தில் நமக்குக் காட்டுகிறது.
நெடிய பனைகள் ஒரு மரபின் மறுவாசகம். நாவல் முடிந்த பிறகு வாசகனின் உள்ளத்தில் ஓர் இனிமையான நெருப்பு தங்குகிறது. அது பனையின் நிழலோ அகதியின் நம்பிக்கையோ அல்ல; மனித குலத்தின் உயிர்மூச்சு. யாழ் மண்ணின் பனைமரம் போலவே, இந்த நாவல் காலத்தால் காய்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை காய்ந்தாலும் நிமிர்ந்து நிற்கும்.
-பேராசிரியர் நா. மணி
ஜெயின் பல்கலைக்கழகம்
பெங்களூரு











