


மும்பைக்குப் புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் இரு வகையினர். முதல் சாரார் அரசு, தனியார் மற்றும் வங்கிப் பணிகளுக்காக வந்த மாதுங்கா தமிழர்கள் என்றால் இரண்டாம் வகையினர் பஞ்சம் பிழைக்க, வயிற்றுப் பாட்டுக்காகப் புலம்பெயரந்த லேபர் கேம்ப் தமிழர்கள். வரைபடத்தில் மாதுங்காவும் லேபர் கேம்ப் பகுதியும் அருகருகே இருந்தாலும் உண்மையில் அவை அருகருகே இல்லை. இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத அழிக்க முடியாததொரு வர்க்கக் கோடு வரையப்பட்டுள்ளது. மும்பைத் தமிழ்ச் சமூகத்தின் இரண்டு முகம் இது.
உழைக்கும் மக்களின் வாழ்விடமாக இருக்கும் தாராவியில் பொதுவுடைமை இயக்கம் காலூன்றியதில் வியப்பில்லை. அதிலும் குறிப்பாக, தாராவிப் பொதுவுடைமை இயக்கமும் அதன் செயல்பாடுகளும் தனித்துவமானவை. தாராவித் தோழர்களின் அர்ப்பணிப்பும் களப்பணியும் சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பும் சிறுதுளி பெருவெள்ளமாய்த் தாராவியின் முன்னேற்றத்தில் பங்களித்திருப்பதைப் பற்றிய ஆவணப் பதிவுகளின் அவசியத்தை உணர்ந்து தோழர் ஞான. அய்யாப்பிள்ளை அவர்களின் 'முடிவில்லாப் பயணங்கள்' தொகுக்கப்பட்டுள்ளது.
அய்யாப்பிள்ளை அவர்களின் முதல் நூலான ‘மனிதநேயம் மலரட்டும்' நூல் குறித்து எழுதிய தோழர் பொன்னீலன், 'இந்த நூல் ரொம்பவும் புதுமையானது, ரொம்பவும் நேர்மையானது' என்று குறிப்பிட்டார். அதுபோலவே, இந்த 'முடிவில்லாப் பயணங்கள் நூலும் ரொம்ப நேர்மையானது.
-எழுத்தாளர் புதியமாதவி











